வாடிக்கையாளர் போல் நடித்து பியூட்டி பார்லரில் திருடிய பெண் கைது

திருவொற்றியூர்: மாதவரம், மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரேணுகா (37). அதே பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி இவர் பார்லர் கல்லாவில் இருந்த ரூ.3 ஆயிரம் திருடு போனதாக மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், பால்பண்ணை குற்றப்பிரிவு ஆய்வாளர் செங்குட்டுவன் வழக்கு பதிவு செய்து, பியூட்டி பார்லரில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஜல்லடியன்பேட்டை, வீராத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த டெய்சி (எ) சின்னு (40) என்பவர் திருடியது தெரிந்தது.

அவரை பிடித்து விசாரித்தபோது, பியூட்டி பார்லர்களுக்கு வாடிக்கையாளர்போல் சென்று, அங்கு இருப்பவர்களிடம் நைசாக பேசி அவர்களை திசைதிருப்பி நகை, பணத்தை திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், டெய்சி மீது மாதவரம், பாண்டிச்சேரி, திண்டிவனம், கடலூர், தெலங்கானா ஆகிய ஊர்களில் உள்ள காவல் நிலையங்களில் இதுபோன்ற குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும், இவரை கைது செய்து, இவரிடமிருந்த ரூ.3 ஆயிரத்தை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: