அழகிய மணவாள ஜீயர் மடத்திற்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு: அறநிலையத்துறை நடவடிக்கை

சென்னை: கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயில் கிழக்கு கோபுரம் அருகே ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் மடம் அமைந்துள்ளது. இந்த மடத்திற்கு சொந்தமாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தேனம்பாக்கம் கிராமம் பெரிய தோட்டம் பகுதியில் சுமார் 8.76 ஏக்கர் நிலம் பல ஆண்டு காலமாக தாமஸ் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து அவரது மகன் பிரின்ஸ் என்பவர் கையகப்படுத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில், ஸ்ரீவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் மடத்திற்கு சொந்தமான நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடமும், நீதிமன்றத்திலும் மடத்தின் சார்பில் வழக்கு தொடுத்திருந்தனர். மடத்துக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத் தருமாறு நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நேற்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தில் போலீஸ் பாதுகாப்புடன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளிரிடமிருந்து நிலத்தை மீட்டு மடத்தின் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.

மேலும், அங்கு அத்துமீறி யாரும் நுழையக்கூடாது என்ற அறிவிப்பு பலகையும் வைத்து விட்டு சென்றனர். நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்ட நிலத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.6 கோடி மதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: