திருவொற்றியூர்: மணலி அருகே சடையங்குப்பம் பகுதியில் ரூ.19 கோடியில் தொடங்கப்பட்ட கால்வாய் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரு மழையின் போது புழல் ஏரியில் மழைநீர் நிரம்பி மதகு திறக்கப்பட்டு அங்கிருந்து உபரி நீர் கால்வாய் வழியாக ஆ.முல்லைவாயல், கொசப்பூர், சடையங்குப்பம் ஆகிய பகுதிகளை கடந்து எண்ணூரில் உள்ள முகத்துவார ஆற்றில் கலக்கிறது. இவ்வாறு கால்வாய் வழியாக பெருக்கெடுத்து வரும் உபரிநீர் சடையங்குப்பம் பகுதிகளில் உள்ள பர்மா நகர், இருளர் காலனி போன்ற பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்து விடுகிறது.
இதன் காரணமாக, அங்குள்ள மக்கள் வெளியே வரமுடியாமல் தவிப்பார்கள். பின்னர், ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு படை வீரர்கள் உதவியுடன் மீட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்படுவார்கள். இப்படி மழைக் காலத்தில் சடையங்குப்பம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க கடந்த 2008ம் ஆண்டு மறைந்த கே.பி.பி.சாமி அமைச்சராக இருந்தபோது பர்மா நகர், இருளர் காலனி அருகே அன்றைய திட்ட மதிப்பீட்டின்படி ரூ.19 கோடி செலவில் கால்வாய் மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், இந்த பணி பல்வேறு காரணங்களால் ஆமை வேகத்தில் நடந்து தற்போது வரை முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.