திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜுடோ ரத்னம் மறைவிற்கு முதல்வர் இரங்கல்

சென்னை: திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜுடோ ரத்னம் மறைவிற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பழம்பெரும் சண்டைப் பயிற்சியாளரான ஜுடோ ரத்னம் (92) வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்து இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ஜுடோ ரத்னம் போக்கிரி ராஜா, தலைநகரம் போன்ற திரைப்படங்களில் நடிகராகவும் மிளிர்ந்தார்.

மேலும், ரஜினி, கமல் உள்ளிட்ட பெரும் நட்சத்திரங்களின் பல திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றவர் ஜுடோ ரத்னம். பொதுவுடைமை கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் அவர் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கலையுலகிலும், அரசியல் உலகிலும் சிறந்த பங்களிப்பை வழங்கி மறைந்துள்ள ஜுடோ ரத்னத்தின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக, அரசியல் உலக நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். ஜூடோ ரத்னம் மறைவுக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories: