சென்னை: நாட்டின் 74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு அரசியல் கட்சி அலுவலகங்களில் நடந்த நிகழ்ச்சியில் கட்சி தலைவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தனர். 74வது குடியரசு தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக காங்கிரஸ் சார்பில் குடியரசு தின விழா சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றி வைத்து, சேவாதள தலைவர் குங்பூ விஜயன் தலைமையில் நடந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அதை தொடர்ந்து, ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் தொடர்ச்சியாக, ‘அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம்-கையோடு கை கோர்ப்போம்’ என்ற பிரசார இயக்கத்தை திரு.வி.க.சாலையில் தொடங்கி வைத்து ராகுல்காந்தியின் கடிதம் மற்றும் பாஜ அரசுக்கு எதிரான குற்றச்சாட்டு பட்டியல் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தார். நிகழ்ச்சியில் எம்பிக்கள் செல்லக்குமார், ஜெயக்குமார், துணை தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, அசன் மவுலான எம்எல்ஏ, பொது செயலாளர் சிரஞ்சீவி, தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், எம்பி.ரஞ்சன் குமார், முத்தழகன், டில்லி பாபு, ஆர்.டி.பி.ஐ. பிரிவு மாநில துணை தலைவர் மயிலை தரணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேசிய கொடியேற்றி, இனிப்பு வழங்கினார். இதில், துணை தலைவர் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமாகா சார்பில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில், மாநில நிர்வாகிகள் சக்தி வடிவேல், திருவேங்கடம், ராஜம் எம்.பி.நாதன், ஜவஹர் பாபு, ஆர்.எஸ்.முத்து, மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், முனவர் பாஷா, அருண்குமார், கோவிந்தசாமி, வில்லிவாக்கம் ரவிச்சந்திரன், கே.ஆர்.டி.ரமேஷ், சைதை நாகராஜன், தி.நகர் கோதண்டன், கோட்டூர் மதன கோபால், மயிலை விவேக், மயிலை சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.மண்ணடியில் உள்ள எஸ்டிபிஐ கட்சி மாநில தலைமையகத்தில், மாநில செயலாளர் ஏ.கே.கரீம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் முகமது ரஷீத், ஜூனைத் அன்சாரி, காஜா முகைதீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தி.நகரில் உள்ள சமக தலைமை அலுவலத்தில் மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் தேசிய கொடியேற்றினார். நிகழ்ச்சியில் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் என்.சுந்தர், துணை பொதுச் செயலாளர்கள் ஜி.ஈஸ்வரன், டி.மகாலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சென்னையில் உள்ள சமத்துவ மக்கள் கழகம் தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தேசியக் கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் பொருளாளர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாவட்ட செயலாளர்கள் மதுரை வீரன், சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல், பல்வேறு கட்சி அலுவலகங்களில் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.