புதுடெல்லி: குடியரசு தினமான நேற்று, உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து இன்கோவேக் அறிமுகப்படுத்தப்பட்டது. நாசி வழியே கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்கான முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இதன்படி, இன்கோவேக் எனப்படும் தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டது. இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் கடந்தாண்டு நவம்பரில் ஒப்புதல் வழங்கியது.
இந்நிலையில், இந்த மருந்தை குடியரசு தினத்தையொட்டிய ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அமைச்சர் ஜிஜேந்திர சிங் ஆகியோர் நேற்று அறிமுகப்படுத்தினர். பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்த மருந்து தனியார் மருந்து கடைகளில் ரூ.800-க்கும், ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு ரூ.325-க்கும் விற்பனை செய்யப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.