அருமனை: தமிழக - கேரள எல்லையில் வெள்ளறடை அருகே நூலியம் என்ற இடத்தில் கழிவுகளை பிரித்தெடுக்கும் ஆலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழக - கேரள எல்லையில் கேரளாவின் வெள்ளறடை பஞ்சாயத்துக்கு உட்பட்ட நெல்லுசேரி அருகே நூலியம் என்ற பகுதி உள்ளது. தமிழகத்தை ஒட்டியுள்ள இந்த பகுதியில் கழிவுகளை பிரித்தெடுக்கும் ஆலை அமைக்க கேரள அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு மருத்துவ கழிவுகள், மனித கழிவுகள் என குறைந்தது ஒரு நாள் 60 லோடு கழிவு பொருட்கள் பிரித்தெடுக்கப்பட உள்ளது.
கேரளாவின் பெருங்கிடா யூனியன், பாறசாலை யூனியன், நெய்யாற்றங்கரை முனிசிபாலிட்டி மற்றும் மாறாவட்டம், தொல்லையம், ஆரியன் கோடு, உத்த சேகரமங்கலம், கள்ளிக்காடு, செங்கல், காரோடு, வெள்ளறடை, குன்னத்துகால் பஞ்சாயத்து கழிவுகளுடன் நகர பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளின் மருத்துவ கழிவுகளும் இங்கு கொண்டுவந்து பிரித்தெடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. திருவனந்தபுரம் பகுதியில் இருக்கக்கூடிய மருத்துவ கழிவுகளும் இங்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நெல்லுசேரி நூலியம் கேரளாவுக்கு உட்பட்ட பகுதியாக இருந்தாலும் அதனை ஒட்டிய பகுதி எல்லாம் தமிழக பகுதிகளாகும்.