சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரிப்பது எனும் முடிவை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். அதற்காக, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றிருக்கும் அரசியல் சூழலில் மதவாத சக்திகள் முழு பலத்துடன் எதிர்க்கப்பட வேண்டியவைகள் என்பதை கருத்தில் கொண்டு நிபந்தனையற்ற ஆதரவை மக்கள் நீதி மய்யம் வழங்கியிருக்கிறது. அவரை மனதார பாராட்டுகிறேன், வரவேற்கிறேன். இந்த நேரத்தில், அதற்கு வலிமை சேர்க்கிற வகையில் கமல்ஹாசன் கருத்து அமைந்திருக்கிறது. சரியான நேரத்தில், சரியான முடிவெடுத்த கமல்ஹாசனுக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாகவும், காங்கிரஸ் கட்சி சார்பாகவும் மீண்டும் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.