172 நில அளவர்களுக்கு பிப்ரவரியில் கூடுதல் ஊதியம் ஒரு லட்சமாவது ஏக்கர் நில அளவீடு பணி: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சென்னை, ஜன. 26: ‘‘தமிழ்நாடு அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை அளவிடும் பணிகள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. அதில் 1 லட்சமாவது ஏக்கர் நில அளவீடு பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு துவங்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து எல்லைக் கற்கள் பதிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று, பெரியபாளையத்தில் 1,00,001வது ஏக்கர் நில அளவீடு செய்யும் பணியினை தொடங்கி வைத்து, எல்லை கற்களை நட்டார்.

அதனை தொடர்ந்து நில அளவை பணிகளில் சிறப்பாக பணியாற்றிய குழு தலைவர்களான 20 மண்டலங்களின் நில அளவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கி, அவர் பேசியதாவது: கோயில் நிலங்களை அளவீடு செய்வதற்கான முதல் நடவடிக்கையாக உரிமம் பெற்ற நில அளவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு, 50 குழுக்களாக பிரிக்கப்பட்டு 20 மண்டல இணை ஆணையர்களின் நேரடி கட்டுப்பாட்டில் பணி அமர்த்தப்பட்டனர்.  கடந்த 2021, 8ம் ேததி அன்று சென்னை, மயிலாப்பூர், கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் கோயில் வளாகத்தில் முதன் முதலாக நில அளவை செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.  

எல்லைக் கற்களை அனைத்து இடங்களிலும் ஒரே வடிவத்தில் அமைத்திடும் வகையில் சிமென்ட் பில்லர்களை தயாரித்து, அதற்கு வெள்ளை நிற வர்ணமும், அப்பில்லரின் ஒரு பக்கத்தில் எச்.ஆர்&சி.இ என்ற ஆங்கில எழுத்துக்கள் வடிவமைக்கப்பட்டு அதில் சிவப்பு நிற வர்ணமும் தீட்டி அளவிடப்பட்ட நிலங்களில் பில்லர்கள்  நடப்பட்டு வருகின்றன. இது மிக பெரிய பணியாகும். அதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் 172 நில அளவர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊதியத்தை ரூ.2,000 உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார். அறிவிக்கப்பட்ட கூடுதல் ஊதியம் பிப்ரவரி மாதத்தில் இருந்து வழங்கப்படும். 2023ம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் என்பதை 2 லட்சம் ஏக்கராக அளவீடு செய்து உயர்த்தி காட்டுங்கள். உங்களுக்கு கூடுதலாக ஊக்கத்தொகை காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்தராஜன், துரை சந்திரசேகரன், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: