செய்யூர் அருகே மின்கம்பத்தின் மீது பள்ளி வாகனம் மோதி விபத்து: உயிர் தப்பிய மாணவர்கள்

செய்யூர்: செய்யூர் அருகே நேற்று மாலை ஒரு பள்ளி வாகனம் சாலையோர மின்கம்பத்தின்மீது மோதியது. இதில், அந்த வாகனத்தில் சென்ற பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். செய்யூர் அருகே கடப்பாக்கம் பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்ததும் 20க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளி வாகனம் கிளம்பியது. இந்த பள்ளி வாகனம் இசிஆர் சாலையில் இருந்து விளம்பூர் நோக்கி சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

அங்கு கிராம  எல்லையில் இருந்த பழுதான மின்கம்பத்தின் மீது பள்ளி வாகனம் வேகமாக மோதியது. இதில் அந்த மின்கம்பம் இரண்டு துண்டாக உடைந்து சேதமானது. மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தன. இதில் பள்ளி வாகனத்தில் இருந்த 12 மாணவர்கள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும், அப்பகுதியில் ஏற்கெனவே மின்தடை செய்யப்பட்டு  இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் வேறொரு வாகனம் மூலம் பள்ளி மாணவர்கள் பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories: