காந்தி மண்டபம் வளாகத்தில் கட்டபொம்மன், மருது சகோதரர்கள் சிலை விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி

சென்னை: காந்தி மண்டபம் வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்களுக்கான சிலைகள் விரைவில் மக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். சென்னை, கிண்டி, காந்தி மண்டபம் வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அயோத்திதாசப் பண்டிதர் நினைவு மண்டபம், வ.உ.சிதம்பரனார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரது சிலைகள் அமைக்கும் பணிகள் மற்றும் தியாக சீலர்களின் நினைவு மண்டபங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:   ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட, வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை, மருது சகோதரர்களுக்கு சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  அதேபோல், முன்னாள் முதல்வர் டாக்டர் சுப்பராயனுக்கு சிலையும் இங்கே அமைக்கப்பட இருக்கிறது. மேலும், வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கு இங்கே இருக்கிறது. அவருக்கான அரங்கம் புதுப்பிக்கப்படுவதோடு, வ.உ.சி-க்கு மார்பளவு சிலையும் வைக்கப்படுகிறது. கோவை வ.உ.சி. மைதானத்திலும் அவருக்கு சிலை அமைக்கப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: