எம்.ஏ.எம்.ராமசாமியின் வளர்ப்பு மகனுக்கு வாரிசு சான்று வழங்கியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

சென்னை: டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியாரின் செட்டிநாடு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான டாக்டர் ஏ.சி.முத்தையா கடந்த 2016ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நகரத்தார் சமூகத்தின் பாரம்பரிய கட்டுப்பாடுகள் மற்றும் பழக்க வழக்கங்களை மீறி ஐயப்பன் தத்தெடுக்கப்பட்டுள்ளார். ஐயப்பன், மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தபோது அதற்கு நாங்கள் ஆட்சேபித்து மனு தாக்கல் செய்தோம். ஆனால், அதை பொருட்படுத்தாமல் ஐயப்பனுக்கு மயிலாப்பூர் வட்டாட்சியர் வாரிசு சான்றிதழ் வழங்கியுள்ளார். அந்த சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து செட்டிநாடு அறக்கட்டளையின் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு  பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பாரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஐயப்பன் சார்பில் மூத்த வழக்கறிஞர் எம்.எஸ்.கிருஷ்ணன் ஆஜராகி, அறக்கட்டளை சார்பில் இந்த வழக்கை தொடர முடியாது என்றும் தத்தெடுப்பது தனிப்பட்ட உரிமை என்று வாதிட்டார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: