தேசிய சதுரங்கப் போட்டியில் பதக்கம் வென்ற பள்ளி மாணவிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து..!

சென்னை: தேசிய சதுரங்கப் போட்டியில் பதக்கம் வென்ற பள்ளி மாணவிகள் அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சிபிஎஸ்இ பள்ளிகளின் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் பஞ்சாப் மாநிலம் சண்டிகர் புரூக் பீல்டு இன்டர்நேஷனல் பள்ளியில், தேசிய அளவிலான சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டி ஜனவரி மாதம் -14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெற்றது. அனைத்து மாநிலங்களிலிருந்தும் 200க்கும் மேற்பட்ட சிபிஎஸ்சி பள்ளிகளில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் திருநெல்வேலி பாளையங்கோட்டை வேல்ஸ் வித்யாலயா பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி அஜிஸ்ரீ 14 வயதிற்கு உட்பட்ட தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

தமிழ்நாட்டில் இருந்து பரிசு பெற்ற ஒரே மாணவி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதே பள்ளியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவிகள் வர்ஷினி, வினிஷா மற்றும் எட்டாம் வகுப்பு மாணவி சக்தி காயத்ரி ஆகியோர் போட்டியில் ஏழாம் இடம் பெற்றனர். தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த பள்ளி மாணவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (23/01/2023) தலைமை செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தில் வைத்து பாராட்டி பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளி தாளாளர் செந்தில் பிரகாஷ் மற்றும் சதுரங்க பயிற்சியாளர் செல்வ மணிகண்டன் உடனிருந்தனர்.

Related Stories: