போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 4,083 வாகன ஓட்டிகளிடம் ரூ.48 லட்சம் அபராதம் வசூல்: சிறப்பு முகாம்கள் மூலம் போலீசார் நடவடிக்கை

சென்னை: சென்னையில் கடந்த 2 நாட்களில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட  4,083 வாகன ஓட்டிகளிடம் ரூ.48 லட்சம்  அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக, சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை  போக்குவரத்து காவல் துறையினர் சாலை விபத்துக்களை குறைக்கும் நோக்கில், மோட்டார் வாகன சட்டத்தை திறம்பட அமல்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் நாள்தோறும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது 6,000 வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு விதிமீறல்களில் ஈடுப்பட்டவர்கள், அபராத தொகையை முறையாக செலுத்துவதில்லை. இந்த அபராத தொகையை வசூலிப்பதற்காக, கடந்த 12ம் தேதி சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் 10 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாம்களில், போக்குவரத்து விதிமீறிய 1,022 பேரிடம் அபராதத் தொகையாக ரூ.11,28,810 வசூலிக்கப்பட்டு 1,615 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.

மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்க்கும் பொருட்டு, கடந்த 19, 20 ஆகிய இரு தினங்களில் சென்னை நகரின் முக்கிய சாலைகளில் 168 இடங்களில் ஒரு காவல் நிலைய எல்லைக்கு 3 இடங்கள் வீதம் சிறப்பு முகாம் நடந்தது. இதில், போக்குவரத்து விதிமீறலில்  ஈடுப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களிடமிருந்து நிலுவையில்  உள்ள  அபராதத்தொகையை கடன் அட்டை, கியூஆர் குறியீடு மற்றும் இணையதள கட்டணம் ஆகியவை மூலம் செலுத்த ஊக்கப்படுத்தப்பட்டது.

இந்த சிறப்பு முகாமில் விதிமீறல்களில்  ஈடுபட்ட 4,083 வாகன ஓட்டிகளிடம் ரூ.48,59,300 அபராதம்  வசூலிக்கப்பட்டு 16,072 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.

அதிகபட்சமாக புனித தோமையர் மாவட்டம், துரைப்பாக்கம் மற்றும் மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தினர் அபராத தொகையை வசூலித்துள்ளனர்.

Related Stories: