வள்ளுவர் கோட்டம் புனரமைப்பு பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ள புனரமைப்பு பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். சென்னையில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள வள்ளுவர் கோட்டம் முன்னாள் முதல்வர் கலைஞரால் 1975-76ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த வளாகத்தில் திருக்குறள் ஆய்வரங்கம், நூலகம், திருக்குறள் மணிமாடம், கல்சிற்ப தேர் ஆகியவை அமைந்துள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, இந்த வளாகத்தில் புனரமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.

அதன்படி, மேற்கூரை மற்றும் பழுதடைந்த கான்கிரீட் தூண்கள் புனரமைத்தல், குறள்மணி மாடம் புதுப்பித்தல், சுமார் 1,490 பேர் அமரக்கூடிய வகையில் குளிரூட்டப்பட்ட நவீன உள்ளரங்கம் அமைத்தல், நவீன வசதிகளுடன் குளிரூட்டப்பட்ட திருக்குறள் ஆய்வு மையம் மற்றும் நூலகம் அமைத்தல், அனைத்து மின்சாதனங்கள் மற்றும் மின் இணைப்புகள் புதுப்பித்தல், நவீன உணவுக் கூடம், நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின் தூக்கி ஆகியவை பொருத்துதல் பணி நடக்க உள்ளது.

மேற்கண்ட வளாகத்தில் நடைபெற உள்ள பணிகள் குறித்து, பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன், ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ எழிலன் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: