சென்னை: எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது உருவசிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘நான் சர்வாதிகாரி அல்ல. கட்சி ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்று கூறி சென்றார். ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த கருத்து குறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது: சசிகலா சொல்வதையே, ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார். முதலில் அவர்கள் 2 பேரும் ஒன்றுபடட்டும். அவர்களுக்கும், அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் ஒன்றுபடட்டும். அப்போதுதான் அவர்களுக்கு வாழ்வு. அவர்களால் அதிமுகவினருக்கும், தமிழக மக்களுக்கும் வாழ்வு ஏற்படப்போவது கிடையாது.