விழுப்புரம்: தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரர் பிரபல சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் க.தியாகராஜன்(66), உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை காலமானார். இவரது மனைவி டாக்டர் பத்மினி, மகப்பேறு மருத்துவ நிபுணர். இவர்களுக்கு டாக்டர் திலீபன், டாக்டர் சிட்டிபாபு என 2 மகன்கள் உள்ளனர். இவர் விழுப்புரம் அரசு மருத்துவமனை, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக தலைமை மருத்துவ பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை மருதூர் பவர் ஆபீஸ் சாலையில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், கணேசன், மா.சுப்ரமணியன், மகேஷ் பொய்யாமொழி, மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள், பேரறிவாளன், அவரது தாயார் அற்புதம்மாள் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.