நாசா வெளியிட்ட தரவுகளின்படி செவ்வாய் கிரகத்தை சுற்றிலும் தனி அலை: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

மும்பை: செவ்வாய் கிரகத்தை சுற்றிலும் தனி அலைகள் இருப்பதற்கான முதல் ஆதாரத்தை இந்திய விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையை சேர்ந்த இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஜியோ மேக்னடிசம் (ஐ.ஐ.ஜி) ஆராய்ச்சியாளர்கள் சமர்பித்த அறிக்கையில்:

நாசாவின் செவ்வாய் வளி மண்டலம் மற்றும் நிலையற்ற பரிணாமம் (மேவன்)  விண்கலத்தின் லாங்முயர் ஆய்வு மற்றும் அலைகள் கருவி மூலம் பதிவு  செய்யப்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட மின்சார புல தரவுகளின்படி பார்த்தால், செவ்வாய் காந்த மண்டலத்தை சுற்றிலும் தனி அலைகள் உள்ளன. இந்த தனி அலைகள் செவ்வாய் காந்த மண்டலத்தில் உள்ள தனித்த மின்புல ஏற்ற இறக்கங்கள் ஆகும். அவை துகள் ஆற்றல், பிளாஸ்மா இழப்பு மற்றும் அலைத்துகள் இடைவினைகள் மூலம் போக்குவரத்தை கட்டுப்படுத்துகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து, மேற்கண்ட நிறுவனத்தின் விஞ்ஞானி பாரதி காகட் கூறுகையில், ‘பொதுவாக எந்த விண்வெளி நிறுவனமும் தனது பேலோடில் இருந்து தரவை 6 மாதங்களுக்கு தக்க வைத்து ஆய்வு செய்யும். அதன் பிறகு கொள்கையின்படி பொது களத்தில் தரவுகளை வைக்க வேண்டும். நாசா அந்த மேவன் தரவை பொது டொமைனில் வைத்த போது எங்களது குழு அதனை படித்தது. 3 மாத பகுப்பாய்வுக்கு பிறகு செவ்வாய் கிரகத்தின் காந்த மண்டலத்தில் தனி அலைகளை கண்டுபிடித்தோம்’ என்றார். இந்த கண்டுபிடிப்புகள் தி அஸ்ட்ரோபிசிகல் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: