வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் விவகாரம் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து முடிவு: இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு

சென்னை: உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு கடந்த 9ம் தேதி நடைபெற இருந்த தேர்தல் பல்வேறு பிரச்னை காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வழக்கறிஞர் சத்தியபால் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஜி.மோகனகிருஷ்ணன், எம்.வேல்முருகன், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் ஜி.ராஜேஷ் மற்றும் பல வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தலை நேர்மையாக நடத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட க்யூஆர் கோடு  நடைமுறையில் பிரச்னை ஏற்பட்டதும், வெளியில் இருந்து சிலர் புகுந்ததால் தேர்தலை ரத்து செய்ய நேர்ந்ததாக கூறினார். அப்போது, வாக்குச்சாவடியை கைப்பற்றியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தரப்பு வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் நீதிமன்ற அமைதியாக இருக்கக்கூடாது என்றார்.இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் பெருமையை மீட்டெடுக்க வேண்டுமென கூறிய நீதிபதிகள், தேர்தல் அன்று நடந்த பிரச்னை தொடர்பாக அறிக்கை மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து உத்தரவு பிறப்பிக்கப்படும். நிறுத்தப்பட்ட தேர்தலை விரைவில் நடத்தும் வகையில் புதிய தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

Related Stories: