இன உணர்வு, தமிழுணர்வு என்றும் போகாது சுயமரியாதையை உரசி பார்த்தால் அது எதையும் சுட்டெரிக்கும்: கனிமொழி எம்பி ஆவேசம்

பெரம்பூர்: எங்கள் தலைவர்கள் அளித்துள்ள இன உணர்வு, தமிழுணர்வு, சுயமரியாதை எங்களைவிட்டு என்றும் போகாது. எங்களுக்குள் உள்ள சுயமரியாதையை உரசிப் பார்த்தால் அது எதையும் சுட்டெரிக்கும் என கனிமொழி எம்பி ஆவேசமாக பேசினார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பெரம்பூர் தனியார் பள்ளி வளாகத்தில் இனமான பேராசிரியரின் நூற்றாண்டு விழா மற்றும் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த 500 மகளிர் அணி நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு, புத்தாடைகள், பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட துணைச் செயலாளர் புனிதவதி எத்திராசன் தலைமை வகித்தார்.

இதில், திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி சிறப்புரை ஆற்றி, பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார். சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்பி.,  சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மகளிர் அணி துணைச் செயலாளர் குமரி விஜயகுமார், மண்டல குழு தலைவர் சரிதா, மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி பேசியதாவது:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பெரும்பான்மையானவர்கள் உள்ள இடத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படதாத ஒருவர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, அம்பேத்கர், காமராஜர் ஆகியோரை இழிவுபடுத்தி உள்ளார் என்றால் அது வருத்தப்படக் கூடிய ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஆனால் அதையும் தாண்டி நாம் பெருமை கொள்ளும் வகையில், நீ யாராக இருந்தாலும், தவறு என்றால் அந்த இடத்திலேயே கண்டிபேன் என்று தீர்மானம் நிறைவேற்றியவர் நம்முடைய முதலமைச்சர். அவுட் ஸ்டாண்டிங் முதலமைச்சராக நமது முதலமைச்சர் சட்டமன்றத்தில் செயல்பட்டதால், ஸ்டாண்ட் அவுட் ஆனார் கவர்னர்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் இருக்கக்கூடிய காரணத்தால் மக்களுக்கு எதிராக, ஜனநாயகத்திற்கு எதிராக பல்வேறு சட்டங்களை ஒன்றிய அரசு இயற்றி வருகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமும், இதர எதிர்க்கட்சியும் வெளிநடப்பு செய்வோம், ஆனால் ஆளுநர் வெளிநடப்பு என்பது முதல்முறையாக நமது சட்டமன்ற பேரவையில் அரங்கேறி உள்ளது. தமிழ்நாடு முன்னேறிய நாடுகளை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது.

அதுதான் திராவிட மாடல் ஆட்சி என்பதை ஒருவருக்கு நாம் பாடமாக எடுத்துக்கொண்டு இருக்க முடியுமா, மக்கள் நமக்கு வாக்களித்தது மக்கள் பணி ஆற்ற, மக்களுக்காக அரசு செய்யும் பணிகளை ஆளுநருக்கு எடுத்துரைப்பதற்கு அல்ல என்பதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும். எங்கள் தலைவர்கள் எங்களுக்கு அளித்துள்ள இன உணர்வு, தமிழுணர்வு, சுயமரியாதை ஆகியவை எங்களை விட்டு என்றும் போகாது. எங்கள் உள் என்றும் அது இருப்பது. அதை சற்று உரசி பார்த்தால் எதையும் சுட்டெரிக்கும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: