கே.வி.குப்பம்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த பி.என்.பாளையம் ஊராட்சி புதூர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் நாகேஷ்(41). பால் வியாபாரியான இவர் கடந்த 5 ஆண்டுகளாக அதே பகுதியிலுள்ள மேஸ்திரிதோப்பு எனும் பகுதியில் பால் கொள்முதல் நிலையம் நடத்தி வந்தார். திமுக கிளை செயலாளராகவும் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் நாகேஷ் பால் கொள்முதல் நிலையத்தை மூடிவிட்டு அருகில் உள்ள வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்மநபர்கள் சரமாரி வெட்டிவிட்டு, தப்பி ஓடிவிட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்தார்.