தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்

கோவை: கோவையில் தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன் என்று கைதான அண்ணன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.கோவை இருகூரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (23). வெள்ளலூர் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் பம்ப் ஆபரேட்டர். இவர், கோவையை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் காதல் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமடைந்தார். இதையறிந்த சிறுமியின் அண்ணன் சுருளி (எ) சுரேந்திரன் (28) அதிர்ச்சியடைந்தார். உடனே சுரேந்திரன், கடந்த 26ம் தேதி ஜெயச்சந்திரனிடம் நைசாக பேசி பெட்ரோல் பங்க்கில் இருந்து பைக்கில் தடாகத்திற்கு அழைத்து சென்றார். அங்கு சுரேந்திரனின் நண்பர்கள் அஜித், நவீன், கார்த்திக், குழந்தை இருந்தனர்.

அப்போது, தங்கையை காதலித்து கர்ப்பமாக்கியது குறித்து கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 5 பேரும் ஜெயச்சந்திரனை தாக்கினர். பலத்த காயத்துடன் அவர் வீட்டிற்கு சென்றார். உடனே அவரது குடும்பத்தினர், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நேற்று மாலை கோவையில் பதுங்கியிருந்த சுரேந்திரன் உட்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

சுரேந்திரன் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: நட்பாக பழகிய எனது தங்கையை காதல் வலையில் வீழ்த்தி ஜெயச்சந்திரன் கர்ப்பமாக்கியுள்ளார். வெளியே தெரிந்தால் அவமானமாகி விடும் என்று நினைத்து எனது தங்கையை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டேன். அவர் மறுத்ததோடு அலட்சியமாக பேசினார். ஜெயச்சந்திரன் ஏற்கனவே 2 பெண்களை காதலித்து வந்ததும் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த நான் நண்பர்களுடன் சேர்ந்து அவரை தாக்கினேன். இதில் அவர் இறந்துவிட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.

சுரேந்திரன் பல்வேறு அடிதடி, மோதல் விவகாரங்களில் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது. இவர் மீது நகர போலீசில் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது தாய் கூறுகையில், ‘என் மகனை கடத்தி சென்று மயக்க ஊசி போட்டு தாக்கியுள்ளனர். வலி மற்றும் காயம் தெரியாத வகையில் இப்படி தாக்கியுள்ளனர். கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

The post தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Related Stories: