பருப்பு மூட்டைகளுடன் கடத்தப்பட்ட மினி லாரி விபத்தில் சிக்கியது; 2 மணி நேரத்தில் மீட்பு, ஒருவர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பருப்பு மூட்டைகளுடன் கடத்தப்பட்ட மினி லாரி விபத்தில் சிக்கியது. 2 மணி நேரத்தில் மினி லாரியை போலீசார் மீட்டு கடத்தியவரை கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் வெற்றிநகரை சேர்ந்தவர் பாஸ்கர் (53). இவர், தனது வீட்டிலேயே பருப்பு குடோன் வைத்து கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் 65 பருப்பு மூட்டைகளுடன் மினி லாரியை தனது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சாப்பிட வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது மினி லாரியை யாரோ எடுக்கும் சத்தம் கேட்டு பாஸ்கர் வெளியில் ஓடி வந்துள்ளார். அதற்குள் மினி லாரி மாயமானது.

இதுகுறித்து பாஸ்கர் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். கடத்தப்பட்ட மினிலாரியை பின் தொடர்ந்து போலீசார் சென்றனர். அப்போது, சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரும்புதுார் அருகே மினி லாரி முன்னால் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் மினி லாரியை அங்கேயேவிட்டுவிட்டு மர்மநபர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார், பருப்பு மூட்டைகளுடன் கடத்தப்பட்ட மினி லாரியை 2 மணி நேரத்தில் மீட்டனர். விசாரணையில், மினி லாரியை கடத்தி சென்றது கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்துார் பகுதியை சேர்ந்த ஜெயலாபுதீன் (28) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பருப்பு மூட்டைகளுடன் கடத்தப்பட்ட மினி லாரி விபத்தில் சிக்கியது; 2 மணி நேரத்தில் மீட்பு, ஒருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: