சென்னை: குடிநீர் குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளதால், அடையாறு, பெருங்குடி சுற்று பகுதிகளில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேளச்சேரி-தாம்பரம் சாலையில் (தேசிய காற்று சக்தி நிறுவனம் எதிரில்) தற்போதுள்ள 800 மி.மீ விட்டமுள்ள கடல்நீர் சுத்திகரிப்பு பரிமாற்றக் குழாயினை மடிப்பாக்கம் குடிநீர் விநியோக அமைப்புடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நெம்மேலி 110 எம்.எல்.டி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. எனவே, பகுதி-13, 14 மற்றும் பகுதி-15 ஆகிய பகுதிகளில் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக, பகுதி-13 பொறியாளரை 8144930913 என்ற எண்ணிலும், பகுதி-14 பொறியாளரை 8144930914 என்ற எண்ணிலும், பகுதி-15 பொறியாளரை 8144930915 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
