இந்தியா-ஆஸ்திரேலியா தடையற்ற ஒப்பந்தம் மூலம் 5 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்: ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை இணை செயலாளர் பாலாஜி தகவல்

சென்னை: இந்தியா- ஆஸ்திரேலியா ஒப்பந்தம் மூலம் 5 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும், ரூ.81,710 கோடி கூடுதல் ஏற்றுமதி வாய்ப்பும் கிடைக்கும் என ஒன்றிய இணை செயலாளர் பாலாஜி தெரிவித்தார். சென்னையில். இந்தியா - ஆஸ்திரேலியா பொருளாதார கூட்டுறவு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை இணை செயலாளர் பாலாஜி, ஆஸ்திரேலியா துணை தூதர் சாரா கிர்லீவ், வெளிநாட்டு ஏற்றுமதி வர்த்தக இயக்குனரகத்தின் மண்டல கூடுதல் இயக்குனர் ஜெனரல் ராஜலட்சுமி தேவராஜ், ஏற்றுமதி ஆய்வு முகமை துணை இயக்குனர் ஜெயபாலன், ஏற்றுமதி கடன் உத்தரவாக கார்ப்பரேஷன் மண்டல மேலாளர் சுபாஷ் சாஹார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா இருதரப்பு உறவுவானது கடந்த சில ஆண்டுகளாக ஒரு புதிய வளர்ச்சிப் பாதையை அடைந்துள்ளது. 2021ம் ஆண்டின் நிலவரப்படி ஆஸ்திரேலியாவின் மிக பெரிய வர்த்தகப் பங்களிப்பில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. அதன்படி சேவைகள் வழங்குவதில் 2020-21ம் ஆண்டில் 12.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில், 2021-22ம் ஆண்டில் 25.04 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவிற்கு இந்தியாவிலிருந்து பொறியியல் ஏற்றுமதியானது 54.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனிடையே வர்த்தக உறவை எளிதாக்கும் வகையில் இந்தியா - ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம் இந்தியாவின் வர்த்தக ஏற்றுமதி கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை இணை செயலாளர் பாலாஜி கூறியதாவது: இந்தியா-ஆஸ்திரேலியா, இந்தியா- கனடா இடையே பொருளாதார கூட்டுறவு மற்றும் வர்த்தக ஒப்பந்தம், 2022ம் ஆண்டு ஏப்ரலில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் டிசம்பர் 29ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான ஒப்பந்தம் வாயிலாக, இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சுங்க வரி இல்லாமல் ஏற்றுமதி செய்யப்படும். தற்போது 98.3 சதவீத வரித் திட்டங்களுக்கு முழுமையான சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 1.7 சதவீதம் வரித் திட்டங்களுக்கு 5 ஆண்டுகளில் முழு வரி விலக்கு அளிக்கப்படும்.

இதில் ஜவுளி மற்றும் ஆடைகள், விவசாயம் மற்றும் மீன் பொருட்கள், தோல், காலணிகள், மரச்சாமான்கள், நகைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்துகள் உட்பட 10 துறைகள் தொடர்புடைய பொருட்களுக்கு உடனடி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் வாயிலாக 5 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும், ரூ.81,710 கோடி கூடுதல் ஏற்றுமதி வாய்ப்பும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். ஆஸ்திரேலியா துணை தூரர் சாரா கிர்லீவ் கூறியதாவது: ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுபமதி செய்யப்படும் 90 சதவீதம் பொருட்களுக்கு, சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில், 85.3 சதவீத பொருட்களுக்கு உடனடியாகவும், 3.67 சதவீத பொருட்களுக்கு 3, 5, 7 மற்றும் 10 ஆண்டுகள் என படிப்படியாக வழங்கப்பட உள்ளது. இதில் நிலக்கரி, ஒயின், கடல் உணவு பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: