பெரியார் பல்கலை. முறைகேடு விசாரணைக்குழு அமைத்தது அரசு

சென்னை: பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரணை குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணை: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் நடைபெறுவதாக பல புகார்கள் அரசிடம் பெறப்பட்டு வருகின்றன. அதில், உடற்கல்வி இயக்குநர் நியமனத்தில் பல்கலைக்கழக மானிய குழுவின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படாதது, பல்கலைக்கழக நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் ஆகிய பதவிகள் இட ஒதுக்கீடு ஆணைப்படி நிறைவேற்றாதது, தமிழ்துறை தலைவர் பெரியசாமி நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகளான போலி சான்று, தகுதியின்மை ஆகியவை குறித்து விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், இவரை விட பலர் பணியில் சீனியராக இருக்கும் நிலையில் பணியில் இளையவரான இவரை ஆட்சிக்குழு உறுப்பினராக நியமனம் செய்ய பரிந்துரை செய்து விதிகளுக்கு புறம்பாக நியமித்தது.

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்ளை நியமிக்கும் குழுவில் விதிகளுக்குப் புறம்பாக பெரியசாமியை நியமித்தது, பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய நெல்சனை துணை வேந்தரின் உதவியாளராகவும், குழந்தைவேல் என்பவரை முக்கிய பொறுப்பிலும் முறைகேடாக நியமனம் செய்யப்பட்டது. 450 பணியாளர்கள் பணியாற்றிவரும் நிலையில் சுமார் 18 மாணவர்களை பணிபரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளுக்கு பிறகு மணிக்கணக்கு அடிப்படையில் பணியமர்த்தப்பட்டது உள்ளிட்ட 13 புகார்கள் கூறப்பட்டுள்ளது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிச்சாமி, அரசு இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 2 மாதங்களுக்குள் தங்களது விசாரணை அறிக்கையை அரசுக்கு சமர்பிக்க வேண்டும். இந்தக் குழுவின் விசாரணைக்கு பெரியார் பல்கலைக்கழகம் உரிய வசதிகளை செய்து தரவேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: