திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் அழூர் அருகே உள்ள பெருங்குழி பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான கோழி, வாத்துப் பண்ணைகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான கோழி மற்றும் வாத்துக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கடந்த சில தினங்களாக இந்தப் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த நூற்றுக்கணக்கான கோழிகளும், வாத்துகளும் திடீரென சாகத் தொடங்கின. இவற்றின் ரத்த மாதிரி பரிசோதனைக்காக போபால் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்தப் பண்ணையில் உள்ள வாத்து, கோழிகளையும், மேலும் 1 கிமீ சுற்றளவில் உள்ள அனைத்து பறவைகளையும் கொல்ல தீர்மானிக்கப்பட்டது. முதல் கட்டமாக 3,000 பறவைகளைக் கொல்லும் பணி இன்று காலை தொடங்கியது.