அண்ணியுடன் கள்ளத்தொடர்பால் ஆத்திரம் கொழுந்தன் தாக்கியதில் கூலி தொழிலாளி உயிரிழப்பு: கொலை வழக்கு பதிந்து போலீஸ் விசாரணை

தண்டையார்பேட்டை: அண்ணியுடன் தனியாக இருந்ததை பார்த்து, கொழுந்தன் தாக்கியதில் படுகாயம் அடைந்த கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (40), கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த வேலு என்கிற தங்கவேலு (34) சென்றுள்ளார். மணிகண்டனை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த அவர், எதற்காக என் அண்ணன் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்தாய் என்று கேட்டு மணிகண்டனை அடித்துள்ளார்.

இதில் கீழே விழுந்த அவர் தலையில் பலத்த காயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மணிகண்டனின் மனைவி லதா வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் தங்கவேலுவை கைது புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, வண்ணாரப்பேட்டை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: