நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் கோசாலைக்கு கன்று பராமரிப்பு பெட்டகம்: அமைச்சர்கள் வழங்கினர்

ஆலந்தூர்: நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் கோசாலைக்கு இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் கன்று பராமரிப்பு பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அறநிலையதுறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு, கோயில் கோசாலையில் உள்ள கன்றுகளுக்கான உப்பு மற்றும் புரதசத்துக்கள் அடங்கிய பாதுகாப்பு பெட்டகங்களை வழங்கினர்.

பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறுகையில்:

தமிழகத்தில் உள்ள கால்நடைகளை பாதுகாக்க கன்று பராமரிப்பு பெட்டகம் வழங்கும் திட்டம் மூலம், அறநிலைய துறையின் கீழ் உள்ள 121 கோசலைகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை பராமரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.20 கோடி நிதி ஒதுக்கினார். இதில், ஒருங்கிணைந்த கோசாலை பழனி, திருசெந்தூர், ஸ்ரீரங்கம் ஆகிய கோயில்களில் செயல்பாட்டில் உள்ளது. நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள கோசாலையில் புரதசத்துகள் கொண்ட கன்று பாதுகாப்பு பெட்டகத்தை வழங்கி உள்ளோம், என்றார்.

 அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில்:

தமிழகத்தில் உள்ள கோயில்களில் பசு கன்றுகளை பாதுகாக்க, ஆரோக்கியமாக வளர கன்று பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் திட்டம் தொடங்கி உள்ளது. இதில், கன்றுகள் பாதுகாக்கப்பட்டால் பசுக்களுக்கு நோய் இல்லாத நிலை ஏற்படும், என்றார்.

நிகழ்ச்சியில், அறநிலையத்துறை ஆணையர் குமரகுரு, ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், கவுன்சிலர்கள் பூங்கொடி ஜெகதீஸ்வரன், துர்காதேவி நடராஜன், பிருந்தா முரளிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: