சென்னை: பொங்கல் திருநாளன்று வைக்கப்படும் எஸ்பிஐ தேர்வுத் தேதி மாற்றப்பட வேண்டும் என்று சு. வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 15ம் தேதி பொங்கலன்று நடைபெறுகிறது. 5,486 பணியிடங்களுக்கான எஸ்பிஐ முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு நடக்கிறது. பலர் பொங்கல் பண்டிகையை ஒட்டி தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ள நிலையில் அன்றைய தினம் எஸ்பிஐ வங்கியின் தேர்வு நடத்தப்படுவது தேர்வர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஜனவரி 15ம் தேதி பொங்கலுக்கு பதில் வேறு ஒரு நாளில் முதன்மை தேர்வை நடத்த தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அந்த வகையில் பொங்கல் திருநாளன்று வைக்கப்படும் எஸ்பிஐ தேர்வுத் தேதி மாற்றப்பட வேண்டும் என்று சு. வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; தமிழர் திருநாளில் தேர்வு... பாரத ஸ்டேட் வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 15 பொங்கல் தமிழர் திருநாளில் அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தேர்வுத் தேதி மாற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடும் நாளில் தேர்வு நடத்துவதற்கு வங்கி அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எஸ்பிஐ வங்கி நிர்வாகத்திடம் பேசியுள்ளதாக வங்கி அதிகாரிகள் சங்க முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் பிராங்கோ தெரிவித்துள்ளார்.