இஸ்ரோ, நாசா இணைந்து செய்யும் செயற்கைக்கோள் பூமியின் சிறு அசைவையும் கண்டுபிடிக்கிறது: இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் தகவல்

சென்னை: சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் 23வது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீ லியோ முத்து உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. சாய்ராம் கல்வி குழுமங்களின் முதன்மை செயல் அதிகாரி  சாய்பிரகாஷ் லியோமுத்து தலைமை வகித்தார். சாய்ராம் குழும நிறுவனங்களின் தலைவி கலைச்செல்வி லியோமுத்து குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். இதில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன முன்னாள் தலைவரும், இந்திய விண்வெளி துறையின் முன்னாள் செயலாளருமான கே.சிவன் கலந்துகொண்டு, முதலிடம் மற்றும் பல்வேறு திறமைகளில் சிறந்த பரிசுகளை வென்ற 125 மாணவர்களுக்கு தங்க பதக்கங்கள் மற்றும் பரிசு வழங்கினார். விழாவில், இளநிலையில் 989 மாணவர்கள், முதுநிலையில் 132 மாணவர்கள் என மொத்தம் 1,121 பேருக்கு பட்டங்களை பெற்றனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், இந்திய விண்வெளி துறையின் முன்னாள் செயலாளருமான கே.சிவன் கூறியதாவது: இஸ்ரோ, நாசா இணைந்து செய்யும் செயற்கைக்கோளின் உபயோகம் என்னவென்றால் அது 700 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து பூமியில் நடக்கின்ற ஒரு சென்டிமீட்டர் அசைவுகளையும் அது கண்டுபிடித்து விடும். வானிலை மாற்றங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பே தகவல் கிடைக்கும், உறைந்து கிடக்கும் பணி, உருகும் பணி என அனைத்தையும் முன்கூட்டியே துல்லியமாக கண்டுபிடித்து தெரிவிப்பதால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

2030ம் ஆண்டு இந்தியாவில் ஸ்பேஸ் எக்கோ சிஸ்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நம்முடைய தேவைகள் மட்டுமல்லாமல் சர்வதேச சந்தையில் நாம் அதிக இடங்களை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். விழாவில் கல்லூரி முதல்வர் பொற்குமரன், அறங்காவலர்கள் சர்மிளா ராஜா, ரேவதி சாய்பிரகாஷ், சதீஷ் குமார், பாலசுப்பிரமணியம், சப்தகிரி கல்வி அறக்கட்டளையின் முதன்மை தகவல் அதிகாரி நரேஷ் ராஜ், கல்வியாளர்கள் ராஜா, ராஜேந்திர பிரசாத், அருணாசலம், மாறன், ஆசிரியர்கள், பட்டம் பெற வந்த மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என சுமார் நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: