இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ஆம்னி பஸ்சில் புதிய கட்டணங்கள்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி

சென்னை: இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு முதல்முறையாக புதிய சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியிருப்பதாவது: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணங்கள் எதிரொலியாக உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. அதன்படி, கட்டணங்களை குறைத்து ஒரு நிர்ணய கட்டணங்களை வழங்கினார். அந்தவகையில் தான், தீபாவளி பண்டிகையின் போது பேருந்துகளும் இயக்கப்பட்டன. ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தியுள்ள பிரச்னை கடந்த சில நாட்களாக இருந்து வந்தன.

அதனடிப்படையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதிக கட்டணமில்லாமல் பேருந்துகளை இயக்க ஒப்புதல் வழங்கியுள்ளனர். கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின்போதே இதுபோல பல பிரச்னைகள் ஏற்பட்ட நிலையில் போக்குவரத்துத்துறை அதிகாரிகளை கொண்ட குழு சோதனை மேற்கொண்டது. இதில் பல்வேறு பேருந்துகளுக்கு விளக்கம் கேட்டு கடிதங்கள் (மெமோ) அனுப்பப்பட்டன. இந்தமுறை கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு தேவையான அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளி போல சிறப்பான முறையில் அனைவரும் இருக்கையில் அமர்ந்து வசதியாக பயணம் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் காவல்துறையினரிடம் அறிவுரை வழங்கி உள்ளோம். அதன்படி எந்தவித பிரச்னையும் இன்றி பேருந்துகள் செல்ல வழிவகை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* முதல்முறையாக புதிய சேவைகள் தொடக்கம்

இந்தாண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு முதல் முறையாக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஜெயங்கொண்டம் மற்றும் அரியலூர் செல்வதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல், பூந்தமல்லி பைப்பாஸ் பேருந்து நிலையத்திலிருந்து ஓசூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி செல்லலாம். சேலத்திலிருந்து பெங்களூருக்கு செல்வதற்கும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

Related Stories: