பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்களால் பரபரப்பு..!

திருவள்ளூர்: பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தினர். தமிழகத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை சேதப்படுத்தினால் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முதல் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். அத்துடன் தலைவர்கள் சிலை சேதப்படுத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் இது போன்ற செயல்களில் சிலர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலையின் முகம், கையை மர்மநபர்கள் இன்று சேதப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சோழவரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். குறிப்பாக கிராமத்தில் எங்கேயாவது சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய விவகாரம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: