தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு 2.54 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம்: உண்டியல் காணிக்கை ரூ.1,446.05 கோடி

திருமலை: தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் தவித்த பக்தர்கள் இந்த ஆண்டு சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தியதால் வருமானம் அதிகரித்துள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தபோது ஜனவரியில் ரூ.79.39 கோடியும், பிப்ரவரியில் ரூ.79.33 கோடி உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர். பின்னர் கொரோனா பரவல் குறைந்ததால் மார்ச் முதல் வாரத்தில் இருந்து பக்தர்களின் எண்ணிக்கையை தேவஸ்தான அதிகாரிகள் அதிகரித்ததுடன் ஆர்ஜித சேவைகள் மற்றும் சிறப்பு தரிசனங்களை மீண்டும் தொடங்கினர்.

இதனால் பக்தர்களின் எண்ணிக்கையும் உண்டியல் காணிக்கையின் வருமானமும் கொரோனா காலத்திற்கு முன்பை விட அதிகமாகக் குவியத் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக மார்ச் மாதம் ரூ.128.64 கோடியும், ஏப்ரலில் ரூ.127.65 கோடியும், மே மாதத்தில் ரூ130.34 கோடியும், ஜூன் மாதம் ரூ.123.74 கோடியும், ஜூலையில் ரூ.139.33 கோடியும், ஆகஸ்டில் ரூ.140.34 கோடியாக காணிக்கை கிடைத்தது. ஒரே மாதத்தில் இந்த வருவாய் என்பது தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக கிடைத்தது. செப்டம்பரில் ரூ.122.19 கோடி, அக்டோபரில் ரூ.122.83 கோடி, நவம்பரில் ரூ.127.31, டிசம்பரில் (30ம் தேதி வரை) உண்டியல் வருமானம் ரூ.125.19 கோடி. இந்த ஆண்டு மொத்த வருமானம் சுமார் ரூ.1,446.05 கோடியாக வருவாய் கிடைத்தது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2022-23 ஆண்டு பட்ஜெட்டில் உண்டியலின் வருவாய் ரூ.1000 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஜனவரியில் 9,96,093 பக்தர்களும், பிப்ரவரியில் 10,95,724 , மார்ச்சில் 19,72,741 , ஏப்ரலில் 20,64,915 , மே மாதத்தில் 22,61,641 , ஜூன் மாதம் 23,23,421, ஜூலையில் 23,40,229 ஆகஸ்டில் 22,22,184 , செப்டம்பரில் 21,12,254, அக்டோபரில் 22,74,265, நவம்பரில் 20,77,816, டிசம்பரில் 19,47,361 பக்தர்கள் (30 ம்  தேதி வரை), மொத்தம் சுமார் 2.54 கோடி பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். மேலும், சுமார் 11.42 கோடி லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என தேவஸ்தானம் தகவல் அளித்துள்ளது.

Related Stories: