மதுரை விமான நிலையத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் இந்தியில் டார்ச்சர்: வலைதளத்தில் நடிகர் சித்தார்த் பதிவு

அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் தனது வயதான பெற்றோரிடம், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இந்தியில் பேசி நீண்ட நேரம் காக்க வைத்ததாக சமூக வலைதளத்தில் நடிகர் சித்தார்த் குற்றம் சாட்டியுள்ளார். ‘பாய்ஸ்’ தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் சித்தார்த். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், மதுரை விமான நிலையத்தில் விமானம் ஏறுவதற்காக எனது வயதான பெற்றோர் சென்றனர்.

அவர்களது உடமைகளை மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை செய்து, பையில் இருந்த சில்லறை நாணயங்களை வெளியே எடுக்கும்படி வற்புறுத்தியுள்ளனர். இதற்கு எனது பெற்றோர் ஆங்கிலத்தில் பதிலளித்தபோது, அவர்கள் இந்தியில் பேசியுள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கூட்டமே இல்லாத மதுரை விமான நிலையத்தில் 20 நிமிடங்கள் வரை எனது வயதான பெற்றோரை காத்திருக்க வைத்ததாகவும் குற்றம்சாட்டி சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். நடிகர் சித்தார்த்தின் இப்பதிவு நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: