உலகெங்கும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் இந்நன்னாளில், கிறிஸ்துவ பெருமக்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் இனிய வாழ்த்து: வைகோ

சென்னை: உலகெங்கும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் இந்நன்னாளில், கிறிஸ்துவ பெருமக்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் இனிய வாழ்த்து என வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கருணைக்கும், பொறுமைக்கும் மனிதநேயத்துக்கும் இலக்கணமான இயேசு பெருமான், தான் சித்திரவதைக்கு உள்ளானபோதும், சிரசில் முள்முடி சூட்டி சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தியபோதும், தன்னைக் கொடுமைப்படுத்தியவர்களுக்காகவும் இரக்கம் காட்டிய உன்னதமான தியாகம் இப்பூவுலகத்துக்கு வழிகாட்டுகின்ற ஒளியாகவே பிரகாசிக்கின்றது.

மலைப் பிரசங்கத்தில் அவர் செய்த உபதேச மொழிகள், உலக மக்கள் அனைவருக்கும், குறிப்பாக துன்பப்படுகின்றவர்களுக்கு, மனக் காயங்களுக்கு மாமருந்து ஆகும். அதனால்தான், ‘துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் ஆறுதல் அடைவார்கள். நீதியின் மேல் பசி தாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் திருப்தி அடைவார்கள். இரக்கம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.’ என்று உபதேசித்தவர், ‘கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்கள், தட்டுங்கள் திறக்கப்படும்’ என நம்பிக்கை ஊட்டினார்.

இயேசு கிறிஸ்து போதித்த மனிதநேய நெறிகளைப் போற்றிப் பின்பற்றவும், சாதி-சமய வேற்றுமைகளைக் கடந்து சகோதரத்துவம் தமிழகத்தில் மேலோங்கவும் கிறிஸ்துமஸ் பண்டிகைத் திருநாளில் உறுதி கொள்வோம். உலகெங்கும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் இந்நன்னாளில், கிறிஸ்துவ பெருமக்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: