வெளிநாடு செல்ல அனுமதி கேட்ட நடிகை ஜாக்குலின் மனு திடீர் வாபஸ்

புதுடெல்லி; தாயாரை பார்க்க வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு தாக்கல் செய்த மனுவை நடிகை ஜாக்குலின் வாபஸ் பெற்றார். ரூ.200 கோடி மோசடி வழக்கில் சிக்கியுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்பில் இருந்த நடிகை ஜாக்குலின் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே உள்ள அவர் பக்ரைனில் வசிக்கும் தனது தாயாரை பார்க்க செல்ல இன்று (டிச.23) முதல் ஜனவரி 5ம் தேதி வரை அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு சிறப்பு நீதிபதி சைலேந்திர மாலிக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி,’ 2021ல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட உங்கள் தாயை சந்திக்க விரும்புகிறீர்களா? அவரது உடல்நிலையை கவனத்தில் கொள்கிறோம். ஆனால் வழக்கு முக்கிய கட்டத்தில் இருப்பதால்   விண்ணப்பத்தை திரும்பப் பெறலாம். இல்லையெனில் நீதித்துறை உத்தரவை பிறப்பிப்பேன்’ என்றார். இதையடுத்து தனது வக்கீலிடம் ஆலோசனை பெற்ற நடிகை ஜாக்குலின் மனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

Related Stories: