புதுடெல்லி: ஜவுளித் தொழில் நிறுவனங்களை கடுமையான பாதிப்பிலிருந்து மீட்க பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டுமென மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தினார். மக்களவையில் கேள்வி நேரத்தில் டி.ஆர்.பாலு எம்பி பேசியதாவது:
தமிழகத்தின் திருப்பூரில் 10,000 பின்னலாடை நிறுவனங்கள் உள்ளன. அவைகளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 1985ம் ஆண்டில் இந்நிறுவனங்களின் ஏற்றுமதி ரூ.15 கோடியாக இருந்த நிலையில், 37 ஆண்டுக்குப்பிறகு தற்போது ரூ.30,000 கோடியாக உள்ளது. பின்னலாடை நிறுவனங்களுக்கு தேவையான பருத்தி உற்பத்தி தமிழகத்தில் வெறும் 3 முதல் 5 சதவீதம் மட்டுமே உள்ளது. 120 லட்சம் மூட்டை பருத்தி தேவை இருக்கும் நிலையில், உற்பத்தி வெறும் 3 லட்சம் முதல் 5 லட்சம் மூட்டை மட்டுமே.