சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் ரூ.1.05 கோடியில் ஒருங்கிணைந்த திறன் மேம்பாடு மற்றும் விளையாட்டு மையம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் ரூ.1.05 கோடியில் ஒருங்கிணைந்த திறன் மேம்பாடு மற்றும் விளையாட்டு மையம் அமைக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் தேனாம்பேட்டை மண்டலம், பகுதி-27, வார்டு-116க்கு உட்பட்ட டாக்டர் பெசன்ட் சாலையில் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த திறன் மேம்பாடு மற்றும் விளையாட்டு மையம் அமைக்கும் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, ராயபுரம் மண்டலம், வார்டு-62க்கு உட்பட்ட பம்பிங் ஸ்டேசன் சாலை மற்றும் ரிச்சி தெரு சந்திப்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுக் கழிவறையினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும், வார்டு-62ல் சுயம் Initiative என்ற திட்டத்தின் கீழ், மகளிர் சுயஉதவி குழுக்களால் அமைக்கப்பட்டுள்ள நம்ம சந்தை கடையை திறந்து வைத்தார். இந்த நம்ம சந்தை கடையில் Zero Waste இலக்கை குறிக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நம்ம சந்தை கடையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சொந்தமாக பை மற்றும் பாத்திரங்களை கொண்டு வந்து ரூ.50க்கு மேல் பொருட்களை வாங்கி செல்லும் நபர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடியும், பயன்படுத்திய பால் பாக்கெட்டுகள், லேஸ் மற்றும் சிப்ஸ் பாக்கெட்டுகளை சேகரித்து, சுத்தப்படுத்தி கொண்டு வருபவர்களுக்கு 10 பாக்கெட்டுகளுக்கு தலா 5 சதவீதம் தள்ளுபடியும், பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களை சுத்தப்படுத்தி கொண்டு வருபவர்களுக்கு இரண்டு பாட்டில்களுக்கு ரூ.1ம் வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, நிலைக்குழு தலைவர் சிற்றரசு, மண்டல குழு தலைவர்கள் எஸ்.மதன்மோகன், பி.ஶ்ரீராமுலு, கவுன்சிலர்கள் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: