மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே 5 நாட்களுக்கு பின் மலை ரயில் இயக்கம்

ஊட்டி: மேட்டுப்பாளையம்-குன்னூர்-ஊட்டி இடையே 5 நாட்களுக்கு பின் நேற்று முதல் மீண்டும் மலை ரயில் இயக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 13ம் தேதி நள்ளிரவு குன்னூர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக ஒரே நாளில் 303 மிமீ மழை பதிவானது. இதன் காரணமாக மலை ரயில் பாதையில் கல்லார்-குன்னூர் வரை பல இடங்களில் ராட்சத பாறைகள் மற்றும் மரங்கள்  தண்டவாளத்தில் விழுந்தன. இதனால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. கடந்த 14ம் தேதி முதல் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. பாறைகள், மண் குவியல்கள் மற்றும் மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டு சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிந்தன. இந்நிலையில் 5 நாட்களுக்கு பின் நேற்று முதல் மேட்டுப்பாளையம் - ஊட்டி வரையிலான மலை ரயில் சேவை துவங்கியது. 5 பெட்டிகளுடன் மேட்டுப்பாளையத்தில் புறப்பட்ட மலை ரயில் மதியம் 12.05க்கு ஊட்டி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். 5 நாட்களுக்கு பின் மலை ரயில் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: