சென்னை: திருப்பூர் மாவட்டம், அலகுமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கூடாது என கோரி அளித்த விண்ணப்பத்தை 6 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், அலகுமலை கிராம பஞ்சாயத்து தலைவர் தூயமணி, சென்னை ஐகோர்ட்டில் மனுவில், அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. எங்கள் கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் ஏதுமில்லாத நிலையில், மதுரையில் இருந்து காளைகளையும், சிவகங்கையில் இருந்து மாடுபிடி வீரர்களையும் வரவழைத்து வணிக ரீதியில் இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அலகுமலை அடிவாரத்தில் பல ஆண்டுகள் பழைய மரங்கள் அகற்றப்படுகின்றன.