கோவை மாவட்டத்தில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக துணை நிற்கும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: கோவை மாவட்டத்தில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஆதரவாக என்றென்றும் அதிமுக துணை நிற்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை மாவட்டம் அவினாசி, அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாக்களில் உள்ள 6 ஊராட்சிகளில், சுமார் 3800 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, டிட்கோ சார்பில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று 16.8.2021ல் அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகள், உடனடியாக இந்த அரசாணையை ரத்து செய்யாவிட்டால் விவசாயிகளை ஒன்றிணைத்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்து பேசினார்கள். அதிமுக சார்பில், 2.12.2022 அன்று கோவையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதையடுத்து, விவசாயிகளின் விருப்பம் இல்லாமல் வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று அரசு ஒரு அரசாணையை இந்த வாரம் வெளியிட்டுள்ளது. விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக, அவர்களது வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்துகிறேன். மேலும், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஆதரவாக என்றென்றும் அதிமுக துணை நிற்கும் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: