நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட்: 3 வெளிநாட்டினர் அதிரடி கைது

நொய்டா: நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்த 3 வெளிநாட்டினரை உத்தரபிரதேச போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட்டை சிலர் பயன்படுத்தி வருவதாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர், உத்தரபிரதேச சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அதையடுத்து சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து கிரேட்டர் நொய்டா துணை போலீஸ் கமிஷனர் அபிஷேக் வர்மா கூறுகையில், ‘கிரேட்டர் நொய்டாவில் நைஜீரியாவைச் சேர்ந்த இருவர் மற்றும் கானாவைச் சேர்ந்த ஒருவர் என  மூன்று பேரும், பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட்டை தயாரித்துள்ளனர்.

இவர்கள் குஜராத்தின் பாவ்நகரில் பிறந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.11 கோடி மதிப்புள்ள போலி நாணயம் மற்றும் பிற உபகரணங்களையும் கைப்பற்றி உள்ளோம். இந்த கும்பல் இதுவரை எத்தனை பிரபலங்களின் போலி பாஸ்போர்ட் ஆவணங்களை தயாரித்துள்ளது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது’ என்றார்.

Related Stories: