44வது ஒலிம்பியாட் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற குகேசுக்கு வேலம்மாள் பள்ளி ரூ.10 லட்சம் பரிசு: விஸ்வநாதன் ஆனந்த் வழங்கினார்

சென்னை: சென்னை மேல் அயனம்பாக்கத்தில்  உள்ள வேலம்மாள் வித்யாலயா இணைப்பு பள்ளியில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்தது. போட்டியில் சதுரங்க நாயகன் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்  வெற்றிபெற்று தங்கப்பதக்கம் வென்றார். இவரை பாராட்டி மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி சார்பில் ரூ.10 லட்சம் பரிசு வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. பள்ளி தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் வேல்முருகன் வரவேற்றார்.

விழாவில், பத்ம விபூஷன் விருது பெற்ற உலக செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சதுரங்க போட்டியின் அடையாளமாக திகழும் சதுரங்க வீரர் குகேசுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்,  ”நான் பார்த்தவரையில் எதிரே விளையாடும் வீரர் யார் என்பதை பற்றி குகேஷ் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை.

இதுவே அவரது வெற்றிக்கு முக்கிய காரணம்”என்றார். கிராண்ட் மாஸ்டர் குகேஷ் பேசும்போது, ”உலகின் தலைசிறந்த நார்வே வீரர் மேக்னெஸ் கால்சனை வீழ்த்தி சாம்பியனாகவேண்டும் என்பது எனது அடுத்த இலக்கு” என்றார். நிகழ்ச்சியில், கிராண்ட் மாஸ்டர் குகேஷ் பயிற்சியாளர் விஷ்ணுபிரசன்னா, குகேஷின் தாய் டாக்டர் பத்மகுமாரி, தந்தை டாக்டர் ரஜினிகாந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: