புனித தாமஸ் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பாடல் ஆராதனை நிகழ்ச்சி

ஊட்டி :  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஊட்டியில் உள்ள 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித தாமஸ் தேவாலயத்தில்  தீப ஒளி மற்றும் பாடல் ஆராதனை நிகழ்ச்சி நடந்தது.

உலகமெங்கும் வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட உள்ளது.அதன் முன்னேற்பாடு நிகழ்வாக கிறிஸ்து பிறப்பை அறிவிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்துவ மக்கள் இல்லந்தோறும் சென்று பாடல்கள் பாடி ஏசு கிறிஸ்துவின் பிறப்பை அறிவிக்கும் நிகழ்வு மற்றும் ஆலயங்களில் கிறிஸ்து பிறப்பு பாடல்கள் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித தாமஸ் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ்சை முன்னிட்டு தீப ஒளி மற்றும் பாடல் ஆராதனை நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது.நேற்று காலை முதல் தொடர் சாரல் மழை பெய்தது. மழை மற்றும் கடுங்குளிரையும்  பொருட்படுத்தாமல் பாடல் குழுவினர் ஏசு பிறப்பின் நிகழ்வுகளையும் அவர் பிறப்பின் முக்கியத்துவம் குறித்தும் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினர்.

இசை குழுவினரின் இனிய பின்னணி இசையோடு  பாடல்கள் பாடியது கிறிஸ்துவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இந்நிகழ்ச்சியில் மாண்டஸ் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு திருப்பலி நடை பெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவ மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: