மாண்டஸ் புயலில் சேதம் மாணவர்களுக்கு புதிதாக புத்தகம் வழங்க ஏற்பாடு: பள்ளி கல்வி துறை நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் அதன் தொடர்ச்சியாக வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், உள்ளிட்ட பகுதிகளிலும் அதை ஒட்டிய மாவட்டங்களிலும் குடியிருப்புகள் சேதம் அடைந்துள்ளன. பல பகுதிகளில் வீடுகளில் மழை நீர் புகுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இதில் மாணவ மாணவியரின் பாடப்புத்தகங்களும், நோட்டுகள், சான்றுகள், கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவையும் சேதம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.  இது தொடர்பாக பெற்றோர் தரப்பிலான கோரிக்கையை அடுத்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டது.

புயல் மற்றும் கனமழையால்  அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்ற மாணவ மாணவியரின் பாடநூல்கள், கல்வி உபகரணங்கள் ஏதாவது சேதம் அடைந்திருந்தால் அவர்களுக்கு புதியதாக அந்த பொருட்கள் வழங்கப்படும்.. அது குறித்து அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வழியாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவை விநியோகம் செய்யப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதேபோல, கல்வி ஆவணங்கள் சேதம் அடைந்திருந்தால் மாற்றுச் சான்றுகள் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழை நீர், முறிந்து விழுந்த மரங்களை உடனே அகற்றவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: