திருவொற்றியூர்: மணலி மண்டலத்துக்குட்பட்ட கடப்பாக்கம், கன்னியம்மன் பேட்டை, அரியலூர் மற்றும் அதை சுற்றுவட்டார பகுதிகளில் மழைக்காலங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகாமல் இருப்பதை தடுக்க, சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.78 கோடி செலவில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக மேற்கண்ட பகுதிகளில் பெய்த மழைநீர், இந்த புதிய கால்வாய் வழியாக சென்று கொசஸ்தலை ஆற்றில் கலந்ததால், சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதியை மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட இந்த கால்வாயை, தமிழக தலைமை செயலாளர் இறையன்பு நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, அங்கு கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள 3 மதகுகள் மற்றும் கால்வாய் அமைப்பு போன்றவைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.