சென்னை: மாண்டஸ் புயல் மழையின் காரணமாக, மடிப்பாக்கம் மற்றும் ஸ்ரீ பெரும்புதூரில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து ஒரு பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது அப்பகுதியில் சோத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடுத்த மடிப்பாக்கம் ராம் நகர் 7வது தெருவை சேர்ந்தவர் சித்தாள் லட்சுமி (45). ஆர்த்தி, அபிநயா என 2 மகள்கள் மற்றும் அண்ணன் மகன் ராஜேந்திரன் ஆகிய 3 பேருடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் புயல் என்பதால் குடிசை வீடு பாதுகாப்பாக இருக்காது என கருதி பக்கத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் கார் பார்க்கிங்கில் தூங்கச் சென்றனர். ஆனால், லட்சுமியின் 2 மகள்களும் குடிசை வீட்டிலேயே தூங்கிவிட்டனர். அப்போது அந்த, பிளாட்டில் வசிக்கும் அருண்பிரசாத் என்பவருடன் இரவு 11.30 மணி வரை லட்சுமி மற்றும் அவரது அண்ணன் மகன் ராஜேந்திரன் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர், அருண்பிரசாத் உறங்க சென்றுள்ளார். அப்போது கார் பார்க்கிங் பகுதிக்கு அருகில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. உடனே அருண்பிரசாத் ஓடிவந்து பார்த்தபோது லட்சுமி, ராஜேந்திரன் இறந்து கிடந்தனர். அருகில், மின்சார கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்து கொண்டிருப்பதை பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக மின்சார வாரியம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில், மின்சார ஊழியர்கள், மின் இணைப்பை உடனடியாக துண்டித்தனர்.