நெற்பயிரில் குலைநோய் தாக்குதல்-கட்டுப்படுத்த வேளாண் விஞ்ஞானி ஆலோசனை

நீடாமங்கலம் : நெற்பயிரில் குலை நோய் தாக்குதலை கட்டுப்படுத்த பேசில்லஸ் சப்டிலிஸ் என்ற உயிர்கொல்லியை பயன்படுத்த அறிவியல் நிலைய விஞ்ஞானி ஆலோசனை வழங்கியுள்ளார்.

தற்போது நிலவி வரும் சீதோஷ்ண நிலை அதாவது விட்டு விட்டு மழை தூரல், பகல் நேரத்தில் காற்றின் ஈரப்பதம் அதிகமாக நிலவுவதால் நெற்பயிரில் குலை நோய் தாக்குதல் அதிகமாக பரவி வருகிறது என நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் சம்பா மற்றும் தாளடி பருவ நெற்பயிர் தூர்கட்டும் பருவத்தில் உள்ளது. எனவே குலைநோய் தாக்குதல் பற்றிய விழிப்புணர்வு தற்போது அதிகமாக தேவைப்படுகிறது. குலை நோயானது காற்று, விதை மற்றும் வைக்கோல் மூலம் பரவுகிறது. இதன் தாக்குதல் இலையின் மேற்பரப்பில் பசுமை கலந்த நீல நிற புள்ளிகள் தோன்றி பின்பு இரண்டு பக்கங்களிலும் விரிவடைந்து கண் வடிவப் புள்ளிகளின் ஓரங்களில் கரும் பழுப்பு நிறத்திலும் உட்பகுதியில் இளம்பச்சை அல்லது சாம்பல் நிறத்திலும் இருக்கும். இந்த தாக்குதலின் உச்சகட்டத்தில் இலைகள் காய்ந்து தீய்ந்ததுபோல் காணப்பட்டு இலைகள் உதிர்ந்து விடும். நாற்றங்காலில் தாக்கினால் அனைத்து இலைகளும் கருகி இறந்துவிடும்.

மேலும் வளர்ந்த பயிரில் கணு குலை நோய் மற்றும் கழுத்து குலைநோய் என அனைத்து நிலைகளும் இதன் தாக்குதல் தென்படும்.சம்பா பருவத்திற்கு நடவு செய்யும் விவசாயிகள் நாற்றுக்களை நாற்று வேர் குளியல் அதாவது ஒரு எக்டேருக்கு அரை கிலோ அல்லது அரை லிட்டர் பேசில்லஸ் சப்டிலிஸ் என்ற உயிர்க்கொல்லி பயன்படுத்த வேண்டும். நடவு செய்த 10 அல்லது 15 நாட்களில் நன்கு மக்கிய தொழுஉரத்துடன் அரை கிலோ அல்லது 500 மில்லி பேசில்லஸ் சப்டிலிஸ் கலந்து நடவு செய்த வயலில் நேரடியாக தூவ வேண்டும்.

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பேசில்லஸ் சப்டிலிஸ் விற்பனைக்கு உள்ளது. இதனை விவசாயிகள் வாங்கி வயலில் தெளித்து சுற்றுப்புற சூழ்நிலையை பாதுகாக்கலாம்.

செயற்கை பூஞ்சானக்கொல்லிகளான கார்பன்டாசிம் 500 கிராம் அல்லது டிரை சைக்கிளிலோசோல் 500 கிராம் அல்லது அசாக்ஸிஸ்ட்ரோபின் 500 மில்லி ஒரு எக்டருக்கு ஏதாவது ஒரு பூஞ்சானக் கொல்லிகளை கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories: