அகமதாபாத்: குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிச.1 மற்றும் டிச.5ம் தேதிகளிலும், 68 தொகுதிகள் கொண்ட இமாச்சலபிரதேச சட்டப்பேரவைக்கு நவ.12ம் தேதியுடம் தேர்தல் நடந்து முடிந்தது. இமாச்சலில் 76.44% வாக்குகளும், குஜராத்தில் முதல்கட்ட தேர்தலில் 63.31% வாக்குகளும், 2ம் கட்ட தேர்தலில் 65.22% வாக்குகளும் பதிவாகி இருந்தன. இரண்டு கட்ட வாக்குப்பதிவையும் சேர்த்து 66.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
இரண்டு மாநிலங்களிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் குஜராத்தில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இமாச்சலில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இமாச்சலில் 1985க்கு பிறகு ஒரே கட்சி தொடர்ந்து 2 முறை வென்றதில்லை. இந்த வரலாற்றை பாரதிய ஜனதா மாற்றி அமைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.